Pages

Monday, March 5, 2018

‘இஸ்லாத்தின் படி வாழ்வது உங்களின் பிறப்புரிமை.’



- அமீரே ஜமாஅத்தின் எழுச்சியுரை.

எஸ்.ஐ.ஓ.வைச் சேர்ந்த மாணவ, இளைஞர்களைச் சந்திக்கின்ற போதெல்லாம் என் மனம் மகிழ்ச்சியால் நிறைந்துவிடும். வயது முதிர்ந்த தந்தைக்கு பெற்ற பிள்ளைகளைப் பார்க்கும் போது ஏற்படுகின்ற சந்தோஷத்தைப் போன்ற உணர்வை நான் பெறுகின்றேன். அந்த இனிமையையும் சுகந்தத்தையும் சுவையையும் வார்த்தைகளில் வடிக்க முடியாது. என்னுடைய கிழட்டு நாளங்களில் இளமை இரத்தம் பாய்வதைப் போன்று நான் புதுத் தெம்பைப் பெறுகின்றேன்.

நண்பர்களே! தோழர்களே! அன்பு மகன்களே என்று சொல்லி உங்களை அழைத்தாலும் அது தவறு ஆகாது. இந்த அமர்வில் பலரும் ‘இந்த நாட்டின் எதிர்காலம் என்ன ஆகுமோ?’ எனக் கவலை தெரிவித்தார்கள்.
நான் சொல்வேன். இந்த நாட்டின் எதிர்காலம் என்னுடைய இந்த இளைஞர்கள்தாம்..! (தக்பீர் முழக்கம்)

இந்த நாட்டின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை இந்த இளவல்கள்தாம் தீர்மானிப்பார்கள். எதிர்காலம் ஒளிமயமானதாகத்தான் இருக்கும் என்றே இவர்கள் தீர்மானித்து விட்டிருக்கின்றார்கள். நிச்சயமாக ஒளிமயமானதாகத்தான் இருக்கும். இன்ஷா அல்லாஹ். அந்த ஒளிமயமான எதிர்காலத்தை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

ஆயிரக் கணக்கில் இங்கு திரண்டிருக்கின்ற இளைஞர்களைப் பார்க்கின்ற போது - நான் போகின்ற இடங்களிலெல்லாம் ஆயிரக் கணக்கில் மக்கள் கூடத்தான் செய்கின்றார்கள் - நான் தனியாக இல்லை என்றே நான் உணர்கின்றேன். நான் தனியாளாக இல்லை. எனக்குப் பின்னால் ஜமாஅத்தே இஸ்லாமி இருக்கின்றது. எனக்கு பின்னால் இலட்சக்கணக்கான மாணவ, இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்றே உணர்கின்றேன்.

அன்பிற்கினியவர்களே!  நீங்கள் என்னுடையவர்கள். நான் உங்களைச் சேர்ந்தவன் என்றே நான் உணர்கின்றேன். (தக்பீர் முழக்கம்..)

இனி நீங்கள் என்றும் என்னுடன்தான் இருப்பீர்கள் என்கிற எதிர்பார்ப்பும் எனக்கு உண்டு. நானும் உயிருள்ள வரை உங்களுடனே இருப்பேன்.

நண்பர்களே! ‘முஸ்லிம்களின் உயிர், உடல், உடைமை, மானம் ஆகியவற்றுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை’ என இங்குச் சொன்னார்கள். ‘இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளித்திருக்கின்ற உடல், உயிர், மானம் ஆகியவற்றின் பாதுகாப்பை நசுப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன’ என பலரும் சொன்னார்கள். ‘அரசு இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது’ என்றும் சொல்லப்பட்டது. இது உண்மைதான்.

ஆனால் முஸ்லிம்களின் உடைமைகள், உயிர்கள், மானம் ஆகியவற்றைப் பாதுகாக்கின்ற பொறுப்பு உங்களுடையது. வேறு எவரும் அவற்றை உங்களுக்காகப் பாதுகாக்க மாட்டார்கள். கண்ணியத்துடன், மானத்துடன்தான் நீங்கள் இந்த உலகத்தில் இருக்க வேண்டும்; அவமானப்பட்டு, கேவலப்பட்டு அல்ல!. இழிவான வாழ்க்கை வேண்டவே வேண்டாம்.

குர்ஆன் கூறுகின்றது: ஈமான் இல்லாதவர்கள் கூறுகின்றார்கள் : ‘நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்ற பிறகு நம்மில் பலசாலிகளாய், செல்வாக்கு மிக்கவர்களாய் இருப்பவர்கள் இந்த இழிவானவர்களை வெளியேற்றிவிடுவார்கள்’

குர்ஆன் தொடர்ந்து கூறுகின்றது: ‘கண்ணியமும் மரியாதையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உரியதாகும். ஆனால் நம்பிக்கையற்ற இந்தமக்களுக்கு இது புரிவதில்லை’ (அத்தியாயம் 63 அல்முனாஃபிகூன் 8)

கண்ணியமும் இழிவும் எங்களின் கைகளில் என எவர்கள் சொல்கின்றார்களோ அவர்களைப் பார்த்து குர்ஆன் அறிவிக்கின்றது. ‘கண்ணியமும் மரியாதையும் அல்லாஹ்வுக்கு உரியது. இறைத்தூதருக்கு உரியது. இறைநம்பிக்கையாளர்களுக்கு உரியது’. அவர்கள் கண்ணியத்துடன் இருக்கின்றார்கள். கண்ணியத்துடன்தான் இருப்பார்கள். எவராலும் இந்த டிக்னிட்டியை - கண்ணியத்தை எதிர்த்து சவால் விட முடியாது.

ஒரு முறை, ஹிஜ்ரத் நடக்கவிருந்த சந்தர்ப்பத்தில் சத்திய மார்க்கத்தின் எதிரிகள் ‘நாங்கள் முஹம்மத் நபிகளாரை மக்காவிலிருந்து வெளியேற்றிவிடுவோம். கொன்றுவிடுவோம்’ என்று தீர்மானித்தார்கள். அப்போது குர்ஆன் அறிவித்தது. அவர்களுக்குச் சொல்லிவிடுங்கள்:

‘ஆனால், அவர்கள் அவ்வாறு செய்தால் உமக்குப் பின் அவர்களும் இங்கு அதிக காலம் தங்கியிருக்க முடியாது’ (அத்தியாயம் 17 பனூ இஸ்ராயீல் 76)

அதாவது ‘நீங்களும் இங்கு அதிக நாள்கள் இருக்க மாட்டீர்கள். முஹம்மத் நபிகளாரும் அவர்களின் தோழர்களும் இன்றியமையாத சக்தியாய் இருக்கின்றார்கள். அவர்களின் பொருட்டு தான் இந்த நகரத்தில் இறைவனின் அருள்வளங்கள் அருளப்பட்டுக் கொண்டிருக்கின்ற. அவர்கள் இருப்பதால்தான் நீங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர்கள் இந்த நகரத்தை விட்டு வெளியேறிவிட்டார்களேயானால் உங்களாலும் இந்த நகரத்தில் தங்கியிருந்து வாழ முடியாது. இந்த நாட்டின் எதிர்காலமும் உங்களைத்தான் சார்ந்திருக்கின்றது. நீங்கள் வெளியேறி விட்டீர்கள் எனில் இந்த நாட்டுக்கு எந்த எதிர்காலமும் இல்லை. நீங்கள் இங்கு இருக்கின்றீர்கள். அதனால் இந்த நாட்டுக்கும் ஒளிமயமான எதிர்காலம் இருக்கின்றது. நீங்கள் இல்லாமல் போனீர்களேயானால் இந்த நாட்டுக்கு எந்த எதிர்காலமும் இல்லை.

நாடே இருட்டில் மூழ்கியிருக்கின்றது. திரும்பும் திசையெங்கும் காரிருள்தான் சூழ்ந்திருக்கின்றது. இந்த இருளில் வெளிச்சத்தைப் பரப்புகின்ற கோபுரங்களாய் நீங்கள் இருக்கின்றீர்கள். உங்களிடமிருந்துதான் மக்கள் ஒளியைப் பெறுவார்கள்.

நண்பர்களே! தோழர்களே!

நான் இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களோடு சில விஷயங்களைப் பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன். அவை உங்களுக்கு மிகவும் பிடித்துப் போகலாம். அவை உங்களுக்குப் பிடிக்காமலும் போய் விடலாம். ஆனால் நான் எதனை சரியென்றும் சத்தியமென்றும் உணர்கின்றேனோ அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வது என் மீதான கடமையாகும். உங்களுக்குப் பிடிக்காமல் போனாலும் நான் சொன்னவற்றைக் காதாரக் கேட்டு அவற்றின் படி நடப்பது உங்கள் மீதான பொறுப்பாகும். அவற்றைக் கேட்டு அவற்றின் படி செயல்படுவீர்கள் என்கிற எதிர்பார்ப்பும் எனக்கு உண்டு.
Related Posts Plugin for WordPress, Blogger...